பாகிஸ்தானில் மீட்புப் படகு கவிழ்ந்து விபத்து : 13 பேர் பலியான பரிதாபம்

இஸ்லமாபாத்,

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புகளால் அமலான ஊரடங்கால், சரிவடைந்த பொருளாதார சூழலில் இருந்து அந்நாடு இயல்பு நிலைக்கு திரும்பி வராமல் தவித்து வரும் சூழலில், 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகள் தொடர்ந்து, மக்களை மீள முடியாத நிலைக்கு கொண்டு சென்று விட்டுள்ளது.

அந்நாட்டில், தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்துக்கு இதுவரை 1,136 பேர் பலியாகினர். 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிப்பை சந்தித்துள்ளனர். அதாவது, பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 15% மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வெள்ளப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டவர்களை படகு ஒன்றின் மூலம் அழைத்து வரும்போது, அந்தப் படகு கவிழ்ந்ததில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் மாயமாகினர். அதில் இதுவரை 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. மீட்புப் பணியில் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.