பாகிஸ்தானில் அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் கனமழை தொடரும் என அறிவிப்பு

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் பருவமழை தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் பல்வேறு மாகாணங்களில் கடும் வெள்ளம் காரணமாக சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட பேரிடர்களில் சிக்கி அங்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தேசிய பேரிடர் வேளாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

அங்குள்ள கைபர் பக்டுங்க்வா மாகாணத்தின் ஸவாட் பள்ளத்தாக்கு அருகே உள்ள கிராமத்தை இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் பல ஏக்கர் கணக்கிலான பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மாற்றுப் பாதை அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பிற அரசு சாரா அமைப்புகள் மூலம் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாடு முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.