இந்திய அணிக்கு ஜலகண்டாபுரம் வீரர் தேர்வு

சேலம்

ராஞ்சியில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணிக்கு ஜலகண்டாபுரம் வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் தோரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஞானேஸ்வரன். இவருடைய மகன் மணிவண்ணன் (வயது 28). மாற்றுத்திறனாளியான இவர், ஈரோட்டில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மாவட்ட மற்றும் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்காக விளையாடி பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார்.

இதனிடையே சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வான மணிவண்ணன், இந்தியா-நேபாள அணிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்று விளையாடி உள்ளார்.

இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் இந்தியா-வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணிக்கு ஜலகண்டாபுரம் வீரர் மணிவண்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அங்கு 20 ஓவர் போட்டிகள் மூன்றிலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றிலும், 3 நாட்கள் நடக்கும் ஒரு டெஸ்ட் போட்டியும் நடக்கிறது. இதில் வருகிற 20-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக மணிவண்ணன் விளையாட உள்ளார். இந்திய அணிக்கு தேர்வாகி உள்ள அவருக்கு டிவ்வியாங் கிரிக்கெட் சென்டிரல் போர்டு ஆப் இந்தியா சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.