கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் பற்றி சர்ச்சை விக்கிபீடியாவுக்கு ஒன்றிய அரசு சம்மன்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங்கை பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்புடன் தொடர்புபடுத்திய விவகாரத்தில் விக்கிபீடியா நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு சம்மன் அனுப்பி உள்ளது. ஆசியக் கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேற்று முன்தினம் மோதின.  இதில் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவதாக களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ஆட்டம் பரபரப்பான இறுதி கட்டத்தை நெருங்கியது. அப்போது, 18வது ஓவரில் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலியின் எளிய கேட்ச் வாய்ப்பை, அர்ஷ்தீப் சிங் நழுவ விட்டார். இது ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்து, பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், அர்ஷ்தீப் சிங் கேட்ச் பிடிக்காமல் தவற விட்டதே இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்று கூறி சமூக ஊடகங்களில் அவரை கடுமையாக விமர்சித்தனர். இதைத் தொடர்ந்து, அர்ஷ்தீப் சிங்கின் விக்கிபீடியா பக்கத்தில், இந்தியா என்ற வார்த்தை நீக்கப்பட்டு, காலிஸ்தான் என்ற வார்த்தை பதிவு செய்யப்படாத பயன்பாட்டாளர் ஒருவரால் சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் 15 நிமிடங்களில் பதிவு நீக்கப்பட்டு சரி செய்யப்பட்டன.இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விக்கிபீடியா நிறுவன செயல் அதிகாரிகளுக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது. அதில், இந்த செயல் பிரிவினையை தூண்டும் வகையில் அமைந்துள்ளதால், மாற்றம் எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி கேட்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.