கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை- சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-கர்நாடக பா.ஜனதா அரசின் அலட்சிய போக்கால் பெங்களூரு நகர மக்கள் கடும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். வெள்ளத்தால் உயிரிழந்த ஒரு மாணவின் குடும்பத்திற்கு இன்னும் நிவாரணம் வழங்கவில்லை. இதில் கூட அரசு அலட்சியமாக செயல்படுகிறது. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டியிருந்த 1,300 கட்டிடங்களை இடித்து அகற்றினோம். நாங்கள் கே.சி.வேலி திட்டத்தை செயல்படுத்தியதால் கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைத்தது. பெங்களூரு வெள்ள பாதிப்புக்கு முந்தைய காங்கிரஸ் அரசே காரணம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகிறார். ஆனால் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கால்வாய்களை மேம்படுத்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக முதல்-மந்திரி சொல்கிறார். ஆனால் இதுவரை எந்த பணிகளும் தொடங்கவில்லை. ஒரு செல்வந்தர், ராஜகால்வாய் மீதே சாலை அமைத்துள்ளார். இந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது. பெங்களூருவின் வெள்ள பாதிப்புகள் குறித்து சட்டசபை கூட்டத்தில் பிரச்சினை கிளப்புவேன். அதற்கு அரசு பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.