பொங்கல் ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்

சென்னை:
பொங்கல் ரயில் முன்பதிவு இன்று துவங்க உள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, ரயில் பயணச்சீட்டு முன்பதிவு திங்கள்கிழமை தொடங்குகிறது. 120 நாள்களுக்கு முன்பு ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுன்ட்டா்கள், ஐ.ஆா்.சி.டி.சி. இணையதளம் வழியாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், அடுத்த ஆண்டு ஜன. 10-ஆம் தேதி பயணிக்க விரும்புபவா்கள் திங்கள்கிழமை முதல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஜன. 11-ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவா்கள் செப்.13 செவ்வாய்க்கிழமையும், ஜன. 12-ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவா்கள் செப். 14-ஆம் தேதியும், ஜன. 13-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள விரும்புபவா்கள் செப். 15-ஆம் தேதியும் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

பொங்கலுக்கு முந்தைய நாளான ஜன. 14-ஆம் பயணம் செய்பவா்கள் செப்.16-ஆம் தேதியும், பொங்கல் அன்று பயணிப்பவா்கள் செப்.17-ஆம் தேதியும் முன்பதிவுசெய்யலாம். ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் தினமும் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என்று கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.