ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருளுடன் பாக். படகு சிக்கியது: 6 பேர் பிடிபட்டனர்

அகமதாபாத்: குஜராத் கடல் பகுதி வழியாக கடத்தி வரப்பட்ட ரூ.200 மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் மீன்பிடி படகை இந்திய கடற்படை பறிமுதல் செய்துள்ளது. படகில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடற்படை மற்றும் குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் குஜராத் கடல் பகுதியில் அரபிக்கடலில் திடீர் சோதனை நடத்தினர். கட்ச் மாவட்டம், ஜக்காவ் துறைமுகம் அருகே பாகிஸ்தான் மீன்பிடி படகை மடக்கி அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், 40 கிலோ ஹெராயின் போதைப் பொருள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மதிப்பு ரூ.200 கோடி. படகில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 6 பேரையும் கடற்படை அதிகாரிகள் கைது செய்தனர். பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருளை கடத்தி வந்த 6 பேரும் அதை சாலை மார்க்கமாக பஞ்சாப் மாநிலத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக குஜராத் துறைமுகங்களில் போதைப் பொருள் கன்டெய்னர்கள் பிடிபடுவது அதிகரித்துள்ள நிலையில், கடல் வழியாகவும் போதைப் பொருள் கடத்தப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.