சர்வதேச ஜனநாயக தினம் | எங்கேயும், எப்போதும், எல்லோராலும்…!

ஜனநாயகம் என்பது ஒரு வழிமுறை. அது ஒரு இலக்கும் கூட. சர்வதேச சமூகத்தின் முழு பங்களிப்பு மற்றும் ஆதரவுடன் எட்டப்பட வேண்டிய இலக்கு. தனிநபர்கள், பொதுச் சமூகம், அரசாங்கம் என அனைத்திற்கும் இதில் பங்கு இருக்கிறது. எங்கேயும், எப்போதும், எல்லோராலும் அனுபவிக்ககூடியதே ஜனநாயம் – இப்படித்தான் ஜனநாயகம் குறித்து ஐ.நா. தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் விளக்கம் கொடுத்துள்ளது.

யோசித்துப் பாருங்களேன்.. நாம் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எந்த மொழியைப் பேச வேண்டும், என்ன படிக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், என்று எல்லாவற்றையும் யாரேனும் ஒருவர் தீர்மானித்து நிர்பந்தித்தால் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்று?! அப்படியான சங்கிலிகள் நம் கை, கால்களிலும், எண்ணங்களிலும் பிணைக்கப்படாமல் நம் வாயில் இருந்து வார்த்தைகளுக்கு பூட்டு போடப்படாமல் இருந்தால் நாம் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோம்.

அப்படி ஒரு ஜனநாயாக நாடு மலர அதில் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். ஏனெனில், ஜனநாயகம் என்பது அனைத்து குடிமக்களின் சமமான பங்களிப்புடன் நடைபெறும் ஒரு வகையான மக்களாட்சி. அந்த மக்களாட்சியைக் கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி சர்வதேச ஜனநாயக நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் அதன் மாண்பினையும் கோட்பாட்டினையும் உலகம் முழுவதும் பரவலாக்கவும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. இன்று சர்வதேச அளவில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான நாடுகளே மன்னராட்சி முறையில் நடைபெறுகின்றன.

இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையிலேயே நம் நாட்டின் ஜனநாயகத் தன்மை தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தியாவின் அரசியல் கட்டமைப்பு ஒரு ஜனநாயக குடியரசு தன்மை கொண்டதாகும். இது மக்களால் ஆன அரசு. இங்கு நாட்டின் அனைத்து வயது வந்தோரும் அரசு நிர்வாகத்தில் நேரடியாக அல்லது மறைமுகமாக பங்கு வகிக்கிறார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் மக்களாட்சி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கலாம்.

இன்று ஜனநாயகத்தின் பொருள் ஒரு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டதாக இருக்கிறது. மக்கள் தங்களுக்கு பிடித்தமான அரசை தேர்ந்தெடுக்க வேண்டும். அரசு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்பதே அது. அந்த வரையறைக்குள் அடங்காத அரசு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கூட அது யதேச்சதிகார அரசு தான்.

சர்வதேச ஜனநாயக தினம்: வரலாறு: ஐ.நா. பொதுச் சபை கடந்த 2007ஆம் ஆண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றியதனை தொடர்ந்து 2008ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் செப் 15ஆம் தேதி சர்வதேச ஜனநாயக தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனநாயகம், அமைதி, நீடித்த வளர்ச்சிக்கு ஊடக சுதந்திரத்தின் அவசியம் என்ற கருத்தாக்கத்துடன் கடைபிடிக்கப்படுகிறது.

ஜனநாயகம் என்றால் என்ன?: ஜனநாயகம் என்றால் நியாயமான நேர்மையான தேர்தலை சரியான இடைவெளியில் நடத்தி மக்கள் தாங்கள் விரும்பும் ஆட்சி அமைய வழிவகை செய்தல். ஜனநாயகத்தில் அரசியல், பொது உரிமைகளுடன் வாக்களிக்கும் உரிமையும் முக்கியத்துவம் வாய்ந்தது. கருத்துச் சுதந்திரமும், அரசியல் கட்சிகளை உருவாக்கி, அரசியல் பழகும் உரிமையும் இதில் அடங்கும்.

ஒரு ஜனநாயகத்தில் பொதுமக்களுக்கு பொறுப்புக் கூடலை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். இது பொது பொறுப்பில் உள்ள அனைவருக்கும் பொருந்தும். ஜனநாயக நடைமுறைகளில் தனிநபர்களின் பங்களிப்பு எவ்வித பாகுபாடு இன்றியும் உறுதி செய்யப்பட வேண்டும்.

செப்டம்பர் 15.. சர்வதேச ஜனநாயக தினம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.