ஊட்டி: மலர் செடிகள் காற்று மற்றும் மழையில் பாதிக்காமல் இருக்க பாதுகாப்பு குச்சிகள் நடும் பணி பூங்காவில் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். முதல் சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். முதல் சீசனை காண வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல்வேறு மலர் அலங்காரம் மேற்கொள்ளப்படுகிறது. பல்லாயிரம் மலர்கள் கொண்டு மலர் கண்காட்சியும் நடத்தப்படுகிறது.
பூங்கா முழுவதிலும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். அதன்பின், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசன் அனுசரிக்கப்படுகிறது. இரண்டாம் சீசனின் போது முதல் சீசன் போன்ற மலர் கண்காட்சி நடத்தவில்லை என்றாலும், அதற்கு இணையாக பூங்கா முழுவதிலும் இரண்டு லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும். மேலும், 10 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அவை மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும்.
தற்போது, இரண்டாம் சீசன் நடந்து வரும் நிலையில் பூங்காவில் பல ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பத்தாயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அவை பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, ஊட்டியில் அடிக்கடி காற்றுடன் கூடிய கன மழை பெய்து வரும் நிலையில் இந்த மலர் செடிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மலர் செடிகள் பாதிக்காமல் இருக்க தொட்டிகளில் உள்ள மலர் செடிகளில் குச்சிகள் நடவு செய்து மலர் செடிகளை பாதுகாக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. அதேபோல், பூங்கா முழுவதிலும் உள்ள மலர் செடிகளுக்கும் பாதுகாப்பு அரணாக குச்சிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில தினங்களில் இந்த செடிகளில் மலர்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.