கிரிக்கட் வீரர் தசுன் ஷானக்க மற்றும் அவரது அணியினர் ஆசிய கிண்ணம் வரை முன்னேறுவதற்கு தாம் அடைந்த தோல்வியை ஒரு பலமான சக்தியாக பயன்படுத்திக் கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியைப் போல் சிந்தித்தால் உலகின் முன் நாட்டை வெற்றி பெற வைப்பதும் கடினமான காரியம் அல்ல என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
குழுவாக இணைந்து செயற்பட்டமை அவர்களின் வெற்றிக்கு உதவியதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
ரி20 கிரிக்கட் ஆசியக் கிண்ணம், 12வது வலைப்பந்து ஆசியக் கிண்ணம் மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இலங்கை அணிகளை கௌரவிக்கும் விழா, நேற்று (16) பிற்பகல் சினமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி .இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
– வலைப்பந்து வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு தலா ரூ. 2 மில்லியன்
– பொதுநலவாய பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 10, ரூ. 5 மில்லியன்
– மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு ரூ. 5 இலட்சம் டொலர்
– தாய்நாட்டை ஆசியாவின் உச்சத்திற்கு உயர்த்திய கிரிக்கெட், வலைப்பந்து. மெய்வல்லுனர் வீர, வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி பாராட்டு
விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் ஆசியக் கிண்ணம், வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் ஒரு வீராங்கணைக்கு தலா 2 மில்லியன் ரூபாவும் 2 பயிற்சியாளர்களுக்கு தலா 2 மில்லியன் ரூபா வழங்கும் நிகழ்வும் இங்கு இடம்பெற்றது.
அண்மையில் பிரித்தானியாவின் பேர்மிங்கஹமில் நடைபெற்ற 22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை 4 பதக்கங்களை வென்றது. பரா விளையாட்டுப் பிரிவில் வட்டு எறிதலில் பாலித பண்டார வெள்ளிப் பதக்கத்தையும், 100 மீற்றர் போட்டியில் யுபுன் அபேகோன், பெண்களுக்கான 57 கிலோ மல்யுத்தப் போட்டியில் நெத்மி அஹிம்சா போருதொட்ட மற்றும் 55 கிலோ எடைப் பிரிவில் திலங்க இசுரு குமார வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.
வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு விளையாட்டு நிதியிலிருந்து 10 மில்லியன் ரூபாவும், வெண்கலப் பதக்கம் வென்றவருக்கு 5 மில்லியன் ரூபாவும், அவர்களது பயிற்சியாளர்களுக்கு அத்தொகையில் 25% உம் வழங்கப்பட்டது.
விளையாட்டு அமைச்சு மற்றும் விளையாட்டு சங்கங்களின் பங்களிப்புடனும் Dialog Axiata இன் உத்தியோகபூர்வ அனுசரணையுடனும் Cinnamon Hotel and Resort மூலம் இந்த விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தாயகத்தை ஆசியாவின் உச்சிக்கு உயர்த்திய அனைத்து விளையாட்டு வீரர்களை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.
இதற்கு முன்னர் இவ்வாறான விளையாட்டின் வெற்றியை அரசியல்வாதிகள் பங்குபோட்டுக் கொண்டதாகவும், இந்த கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த வெற்றி அர்ப்பணிப்புள்ள விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு 200 சதவீதம் உரித்தாகும் என்றும் தெரிவித்தார்.
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு ரூ. 5 இலட்சம் டொலர்
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 500,000 டொலர்கள் (சுமார் 180 மில்லியன் ரூபா) காசோலையை நேற்று (16) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தது.
ஆசிய கிரிக்கெட் கிண்ணம், ஆசிய வலைப்பந்து கிண்ணம் மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களை கௌரவிக்கும் முகமாக கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (16) நடைபெற்ற நிகழ்வில் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.
கடந்த காலங்களில் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் புற்று நோயாளர்கள் மருந்துப் பற்றாக்குறையால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டிருந்தன.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு தெரியப்படுத்தியது. இதனைக் கருத்திற் கொண்ட ஜனாதிபதி, பிரச்சினையை துரிதமாக ஆராய்ந்து உடனடி தீர்வுகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்தார்.
இதன்படி, மஹரகம வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சின் அறிக்கைகளின்படி, பணப் பற்றாக்குறையே மருந்துகளைக் கொள்வனவு செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணம் என்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் ஷானுக கருணாரத்ன, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவுடன் ஆலோசனை நடத்தி, பண உதவியை ஒருங்கிணைத்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முயற்சிகளுக்கு உடனடியாக பதிலளித்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடாக அதற்கு ஒத்துழைக்க முன்வந்தது. வாக்குறுதியளித்தபடி, அவர்கள் ஆசியக் கிண்ணத்துக்குப் பின்னர் இந்த நன்கொடையைக் கையளித்தனர்.
விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசிங்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா, வலைப்பந்து சங்கத்தின் தலைவர் விக்டோரியா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.