குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து 20 மோட்டார் சைக்கிள்களில் காரை துரத்திய கிராம மக்கள்-3 பேர் படுகாயம்

பெங்களூரு: பாகல்கோட்டையில் குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் காரை கிராம மக்கள் துரத்திய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. அந்த கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

குழந்தை கடத்தல் கும்பல்

பாகல்கோட்டை மாவட்டம் பீலகி அருகே ஒரு காரில் 3 பேர் நின்றனர். அந்த காரின் நம்பர் பிளேட்டும் வெளிமாநிலத்திற்கு சேர்ந்ததாகும். காரில் இருந்தவர்களும் வித்தியாசமான தலை முடியில் இருந்தனர். இதனால் அவர்கள் குழந்தைகளை கடத்தும் கும்பலாக இருக்கலாம் என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்தது. இது கிராமத்தில் உள்ள மக்களிடையே வேகமாக பரவியது.

3 பேர் படுகாயம்-கைது

இதையடுத்து, 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்தனர். பின்னர் அந்த காரை அவர்கள் மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்றார்கள். தங்களை நோக்கி மோட்டார் சைக்கிள்கள் வருவதை உணர்ந்த கார் டிரைவர் வேகமாக ஓட்டிச் சென்றார். இந்த நிலையில், சிறிது தூரத்தில் சாலையோரம் கார் பல்டி அடித்து கவிழ்ந்தது. இதனால் காரில் இருந்த 3 பேர் படுகாயம் அடைந்தார்கள். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவா்கள் 3 பேரையும் கிராம மக்கள் தாக்க முயன்றனர். ஆனால் போலீசார் விடவில்லை.

இதற்கிடையில், காயம் அடைந்தவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த தேவராஜ், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இலியாஷ் மற்றும் ஜெகதீப் என்பதும், இவர்கள் 3 பேரும் மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. இதையடுத்து, 3 பேரும் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் குழந்தைகளை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் இல்லை என்றும், மோசடி வழக்குகளில் தலைமறைவாக இருந்தவர்கள் என்றும் பாகல்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.