ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் வசித்து வருபவர் கண்ணன் (56). இவரது மனைவி முத்துலட்சுமி (55). இவர்களது மகன் மௌலி (25). இவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்காக வாடகை காரில் புறப்பட்டு சென்றனர். அந்த காரை குணசேகரன் (27) என்பவர் ஓட்டி சென்றார்.
இந்த கார் விருதுநகர்-சாத்தூர் இடையே உள்ள அக்ரஹாரப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது கார் எதிர்பாராதவிதமாக ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் கார் நொறுங்கியது. இந்த விபத்தில் முத்துலட்சுமி, அவரது மகன் மௌலி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் கண்ணன், கார் டிரைவர் குணசேகரன் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வச்சக்காரப்பட்டி போலீசார் பலியான தாய், மகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கார் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்ற தாய், மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.