சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சுன் நகரில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம், இந்த உணவகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியது.
இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. விபத்து குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட உணவகத்தின் உரிமையாளரை கைது செய்தனர். அவரிடம் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்தில் 17 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.