திரையரங்குகளில் வீடியோக்கள் எடுப்பது தவறு – இயக்குநர் கௌதம் வாசுதேவ்

சிம்பு நடித்திருக்கும் வெந்து தணிந்தது காடு படம் மூலம் இயக்குநர் கௌதம் வாசுதேவும் கம்பேக் கொடுத்துள்ளார். வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாகம் வெற்றியை அடுத்து அவர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. இந்தச் சூழலில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கௌதம் வாசுதேவ்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ஒரு பெண்ணின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் மல்லிப்பூ பாடல் அமைந்திருந்தது.

ஒரு பெண் மட்டும் தனியாக நின்று நடனமாடும் பாடலாக இல்லாமல், ஆண்களும் இடம்பெறும் வகையில் அந்தப் பாடலை எடுக்க முடிவு செய்தோம். அதனால், சிறிய அறையில் 40 ஆண்களும் இணைந்து நடனமாடும் வகையில் அந்தப் பாடலை எடுத்தோம்.

திரையரங்குகளில் திரைப்படம் பார்ப்போர் 15லிருந்து 20 விநாடிகள்வரை திரைப்படத்தின் காட்சியை படம் படித்து, அதை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். அது தவறு. படம் பார்க்க திரையரங்கம் வருபவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த நினைத்தால் திரையரங்கில் இருந்தவாறு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுக்கொள்ளவதில் தவறில்லை.

ஆனால், படக்காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது தவறான செயல். ஏனென்றால் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு நாங்கள் நிறைய உழைப்பை, நேரத்தை, பணத்தை செலவிடுகிறோம்” என்றார்.

 

முன்னதாக, வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை முன்னிட்டு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இயக்குநர் கௌதம் வாசுதேவுக்கு புல்லட் பைக்கை பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.