‘போன ஜென்மத்தில் நான் சோழனாக ஏதும் பிறந்திருப்பனா என தெரியவில்லை’ – இயக்குநர் பார்த்திபன்

தொடர்ந்து சோழர்கள் தொடர்பான கதாபாத்தரங்களே வருவதால், போன ஜென்மத்தில் தான் சோழனாக ஏதும் பிறந்திருப்பனா என்று தெரியவில்லை என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இன்று வெளியானதையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடிகர் பார்த்திபன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் அருகில் உள்ள இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், “தஞ்சை மண்ணிற்கு என்னுடைய வணக்கம். ராஜராஜ சோழனின் பெருமையை சொல்லி நம்மால் மாளாது. ஆயிரம் ஆண்டுகளாக சொல்லி வருகிறோம் ராஜராஜன் செய்த சாதனைகளை. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே நிலைத்து நிற்கும்.

இந்தப் பெரிய கோயிலை பார்க்கும்போது அவர்கள் எவ்வாறு ரசனையோடு வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதே ரசனையோடு தான் இந்த ‘பொன்னியின் செல்வன்’ இருக்கும். இந்தப் ‘பொன்னியின் செல்வனை’ நாம் கொண்டாட வேண்டியது, பாராட்ட வேண்டியது இந்த தஞ்சை மண்ணில் தான். இது ஒரு பான் (PAN) இந்தியா படம். அதனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திற்கு சென்று உள்ளார்கள். இதில் நடித்த – நடிகர் அனைவரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகு இதுபோல் வாய்ப்பு அமைந்துள்ளது. போன ஜென்மத்தில் நான் சோழனாக ஏதும் பிறந்திருப்பனா என்று தெரியவில்லை. இதுபோன்று வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

image

மக்கள் அனைவரும் ‘இரவின் நிழலுக்கு’ ஆஸ்கார் விருது கிடைக்குமா என கேட்கிறார்கள். அதுவே எனக்கு ஆஸ்கார் கிடைத்தது போல் இருப்பதாகவும். இந்தியாவிலிருந்து சென்ற தமிழ் படமான ‘இரவின் நிழலுக்கு’ ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தித்ததாகவும் தெரிவித்தார். இதுபோல் படங்கள் தொடர்ந்து செய்வதற்கு பாராட்டுகளும் உந்துதல் தான் காரணம். ‘பொன்னியின் செல்வனுக்கு’ பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளது. வட இந்தியாவில் ‘பாகுபலி’ போன்ற படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ மூலம் தமிழுக்கும் அந்தப் பெயர் கிடைக்கும்” அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.