இயற்பியலுக்கான நோபல் பரிசுமூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு| Dinamalar

ஸ்டோக்ஹோம், இயற்பியல் துறையில், 2022-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி உள்ளிட்ட துறைகளில் சர்வதேச அளவில் சிறப்பான பங்களிப்பை அளித்த சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது. அந்த வகையில், 2022ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான இயற்பியல் பரிசை மூன்று விஞ்ஞானிகள் பெறுகின்றனர். அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப்.கிளாசர், ஆன்டன் ஸய்லிங்கர் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘குவாண்டம்’ தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்காக இந்த மூன்று பேரும் நோபல் பரிசு பெறுகின்றனர். முன்னதாக, 2022ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதில், அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக, ஐரோப்பிய நாடான, சுவீடனைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. வேதியியலுக்கான நோபல் பரிசு இன்றும், இலக்கியத்திற்கான பரிசு நாளையும், அமைதிக்கான நோபல் பரிசு நாளை மறுநாளும், பொருளாதாரத்திற்கான பரிசு வரும் 10ம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன.சுவீடனில் டிச., 10ம் தேதி நடக்கும் விழாவில் பதக்கமும், 7 கோடி ரூபாய் ரொக்கமும் பரிசாக அளிக்கப்படும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.