குஜராத் மாநிலத்தில், ஆர்.டி.ஐ ஆர்வலரும் அவரின் மகனும் சென்ற ஸ்கூட்டர்மீது, சட்டவிரோத மணல் அகழ்வில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் கார் மோதியதில், ஆர்.டி.ஐ ஆர்வலரின் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஆர்.டி.ஐ ஆர்வலர் ரமேஷ் பாலியா என்றும் அவரின் மகன் நரேந்திரன் என்றும் தெரியவந்திருக்கிறது. இவர்கள் லக்பத் தாலுகாவில் உள்ள மேக்பர் கிராமத்தில் வசித்துவருகின்றனர். அதோடு, ரமேஷ் பாலியா உள்ளூர் பட்டியலின தலைவராகவும் அறியப்படுகிறார்.

இதில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபர் நவல்சிங் ஜடேஜா என்பவர்மீது ரமேஷ் பாலியா, சட்டவிரோத மணல் அகழ்வு புகார்களை பதிவுசெய்திருக்கிறார். இந்த நிலையில் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் 3-ம் தேதியன்று ரமேஷ் பாலியா, மாலை 6:30 மணியளவில் தயாபர் கிராமத்திற்குச் சென்றுவிட்டு தந்தை மகன் இருவரும் ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் வண்டியைத் பின்தொடர்ந்து வந்த நவல்சிங் ஜடேஜாவின் கார், அவர்களின் ஸ்கூட்டர்மீது மோதியிருக்கிறது. இதில் பலத்த காயத்துடன் ரமேஷ் பாலியா உயிர்பிழைத்தபோதிலும், அவரின் மகன் நரேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் இந்தச சம்பவம் குறித்துப் பேசிய நாரா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் எஸ்.ஏ.மகேஸ்வரி, “சட்டவிரோத மணல் அகழ்வுக்காக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறையிடம் புகார் அளித்ததற்காகப் பாலியாமீது நவல்சிங் ஜடேஜா வெறுப்புடன் இருந்தார். தற்போது நவல்சிங் ஜடேஜா மீது கொலைக் குற்றச்சாட்டும், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

அதையடுத்து இந்தச் சம்பவம் நடந்த மறுநாள் உள்ளூர் குற்றப்பிரிவு குழு நவல்சிங் ஜடேஜாவை கைதுசெய்தது. மேலும், நில அபகரிப்பு தொடர்பாகவும் நவல்சிங் ஜடேஜா மீது குற்றம்சாட்டப்பட்டிருப்பதால், அது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.