திருமண உறவில் சொதப்பாமல் இருப்பது எப்படி? #VisualStory

கணவனும் மனைவியும் என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்க என்னென்ன செய்யலாம். லைஃப் பார்ட்னர் பேசுவதை முழுவதுமாகக் கேளுங்கள். அது உங்களுக்குப் பிடிக்காத விஷயமே என்றாலும் அரைகுறையாகக் கேட்டுவிட்டோ, துணையின் பேச்சைப் பாதியில் நிறுத்திவிட்டோ பேச ஆரம்பிக்காதீர்கள்.

தம்பதி சண்டையில் கவனித்தால் அதற்கான காரணம் என்றோ நடந்த ஒன்றின் எதிரொலியாக இருக்கும். விளைவு, ஒருவர் கோபத்தின் பின்னணி மற்றவருக்குப் புரியாது. எனவே, வாக்குவாதம் வந்தால் பிரச்னை எங்கிருந்து ஆரம்பித்திருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

திருமண வாழ்க்கையைச் சிதைக்கிற முக்கியமான காரணி, துணையிடம் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிற இயல்புதான். தினசரி நடக்கிற சின்னச்சின்ன தவறுகளிலெல்லாம் குற்றம் கண்டுபிடிக்காமல் இருந்தால் திருமண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.

அறியாமல் ஒரு தவறு செய்துவிட்டீர்களென்றால், அதை எதன் வழியாகவும் நியாயப்படுத்தி உங்களைப் பாதுகாக்க முயற்சி செய்யாதீர்கள். அதற்குப் பதில், `நான் இப்படி நினைச்சு செஞ்சேன். அது தப்பாயிடுச்சு. ரொம்ப வருத்தமா இருக்கு’ என்று வெளிப்படையாகப் பேசுங்கள். அந்த வருத்தம் உண்மையானதாக இருக்க வேண்டும்.

சில விஷயங்களில் வாழ்க்கைத்துணையின் கருத்தை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம். அதை சண்டைபோட்டு சத்தமாகவும் சொல்லலாம். நிதானமே தீர்வுக்கு அருகில் செல்லும் வழி என்பதை உணருங்கள்.

காதலன், காதலி மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவதுபோல, பொதுவாக தம்பதிகள் வெளிப்படையாக இருப்பதில்லை. திருமணத்துக்குப் பிறகும் காதல் தொடர வேண்டுமென்றால், காதலிக்கும்போது கடைப்பிடித்த சில நல்ல குணங்களையும் கடைப்பிடிக்க வேண்டும்.

தாம்பத்ய வாழ்க்கைக்கு மிகப்பெரிய எதிரி கோபம்தான். அதைவிடப் பெரிய எதிரி, கோபமாக இருக்கும்போது துணையிடம் அந்தக் கோபத்துக்கான காரணம் தொடர்பாக விவாதம் செய்வது. கோபமாக இருக்கும்போது பேசவே பேசாதீர்கள். தேவைக்கு அதிகமாகப் பேசிவிடுவீர்கள்.

வாழ்க்கைத்துணை வருத்தமாக இருக்கையில், `நீ கோபமா இருக்கிறேன்னு எனக்குப் புரியுது’ என்று சொன்னாலே பாதி பிரச்னை சரியாகி விடும். ஆம்… துணையின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதோடு நின்றுவிடாமல், `உன் உணர்வு புரிகிறது’ என்று வெளிப்படுத்தவும் செய்யுங்கள்.

நம் பார்ட்னர்தான் நம்மை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று இந்தக்கால இளம் தம்பதிகூட நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், நாம் அனைவருமே தனித்தனி மனிதர்கள்.

நம்மை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. நம்முடைய மகிழ்ச்சி பார்ட்னரின் கையில்தான் என்று நினைத்துவிட்டால், இன்னொரு பக்கம், `என் கஷ்டத்துக்கெல்லாம் நீ தான் காரணம்’ என்று துணையை குற்றம் சொல்லவும் ஆரம்பித்துவிடுவோம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.