விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பியுமான திருமாவளவனுக்கு எடுக்கப்பட்ட விழா ஒன்றில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், “சினிமா என்னும் கலையை சரியாக நாம் கையாள வேண்டும். அப்படி கையாள தவறும்போதுதான் நம்முடைய அடையாளம் நம்மிடம் இருந்து பறிக்கப்படுகிறது. வள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது,ராஜராஜ சோழனை இந்து அரசனாக குறிப்பிடுவது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். அவரின் இந்தக் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராஜராஜ சோழன் இந்து இல்லாமலா சிவன் கோயிலை கட்டினார் என பாஜக, இந்து முன்னணியினர் கேள்வி எழுப்பினர். அதேசமயம், ராஜராஜ சோழன் காலத்தில் இந்து என்ற மதம் இல்லை சைவம், வைணவம் என்றுதான் இருந்தது என சீமான் உள்ளிட்டோர் பதிலடி கொடுத்தனர்.
இந்தச் சூழலில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய கமல் ஹாசன், “ ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்பது கிடையாது வைணவம், சைவம், சமணம் என்றுதான் இருந்தது. வெள்ளைக்காரர்கள் எப்படி அழைப்பது என்று தெரியாமல் இந்து என்றார்கள். தூத்துக்குடியை Tuticorin என்று சொன்னதுபோல்” என்றார்.
கமல் ஹாசனின் இந்தக் கருத்து வெற்றிமாறனின் கருத்துக்கு வலு சேர்ப்பதாக இருந்தது. இதனையடுத்து கமல் ஹாசனை பலர் விமர்சிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் கமல் ஹாசனின் நண்பர் என்று அறியப்படும் ஆனந்தகிருஷ்ணன் என்பவர், இந்து மதம் இருப்பதை தான் மறுக்கவில்லை என க்மல் விளக்கமளித்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், “ கமலுடன் கலந்துரையாடினேன். அவருடைய நிலைப்பாடு இதுதான், “பத்தாம் நூற்றாண்டில் ராஜமுந்திரி என்ற இடம் இல்லை. அது ராஜமஹேந்திரவரம் என்று அழைக்கப்பட்டது. அதேபோல், அந்த நாட்களில் சிவன் மற்றும் விஷ்ணு வழிபாட்டாளர்கள் முறையே சைவர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்று அழைக்கப்பட்டனர். இந்து மதத்தின் இருப்பை நான் மறுக்கவில்லை”
இதைப் பொதுவெளியில் பகிர்வதற்கு அவரது அனுமதியும் இருக்கிறது. அவர் சொல்ல விரும்புவது இதைத்தான், “அந்தக் காலத்தில் இந்து மதம் இந்து மதம் என்று அறியப்படவில்லை” என குறிப்பிட்டிருக்கிறார். தற்போது அவரது அந்தப் பதிவு வைரலாகியுள்ளது.