கர்நாடகாவில் 7-வது நாளாக நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி..!

கர்நாடகா,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு கடந்த செப்டம்பர் 7-ந் தேதி தொடங்கினார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள ‘பாரத் ஜோடோ யாத்திரை’ தமிழகம், கேரளாவை தொடர்ந்து கர்நாடகத்தில் தற்போது நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் நடந்த பாதயாத்திரையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் பங்கேற்றார். அவர், 12 நிமிடங்கள் மட்டுமே பங்கேற்று சிறிது தூரம் நடந்து சென்றார். அவரது உடல் நிலையை காரணம் காட்டி மேற்கொண்டு பாதயாத்திரையில் பங்கேற்க வேண்டாம் என ராகுல்காந்தி, சோனியா காந்தியை காரில் அனுப்பி வைத்தார். பாதயாத்திரையில் சிறிது நேரமே பங்கேற்றாலும் சோனியா காந்தியின் வருகை கர்நாடக காங்கிரசார் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், இன்று 31-வது நாளாக கர்நாடக மாநிலம் தும்கூர், மாயசந்திரா பகுதியிலிருந்து கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் காலை நடைபயணத்தை தொடங்கியுள்ளார். இந்த நடைபயணத்தின் போது கர்நாடக மக்கள் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். தும்கூர், மாயசந்திரா பகுதியில் பயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி பனசந்திராவில் நிறைவு செய்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.