5 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் அதிரடி கைது!!

சேலம் மாவட்டம் நரசிங்கபுரத்தை சேர்ந்த தீபன் (32) என்பவர், நீண்ட நாட்களாக திருமணத்துக்கு பெண் பார்த்தும் கிடைக்காத நிலையில், தன்னைவிட வயதில் மூத்த சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த அருள்ஜோதி (36) என்பவரை ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தின் போது அருள்ஜோதிக்கு, தீபன் 15 பவுன் நகை போட்டுள்ளார். ஒரு மாதமாக தீபனுடன் குடும்பம் நடத்தி வந்த அருள்ஜோதி திடீரென்று மாயமாகி விட்டார். இதனால் தீபன், கிச்சிபாளையம் வந்து விசாரித்துள்ளார். அப்போது அவருக்கு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது.

அருள்ஜோதி, தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறியும், கணவரை விவாகரத்து செய்து விட்டதாக கூறியும் 5-க்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்தது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தீபன் ஆத்தூர் போலீசில் புகார் செய்தார்.

வழக்குப்பதிவு செய்த போலீஸார் அருள்ஜோதியை கைது செய்தனர். விசாரணையில், அருள்ஜோதி தனது பெயரை கவுசல்யா, சரண்யா என மாற்றிக்கொண்டு 5க்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்து ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் தான் அழகாக இருக்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, திருமணத்துக்காக ஏங்கும் ஆண்களை மோசடி வலையில் வீழ்த்தி ஏமாற்றி வந்துள்ளார். திருமணம் செய்வதற்கு தன்னிடம் நகைகள் இல்லை என்று கூறி, மணமகனிடம் நகையை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளாகவே அவர் இந்த மோசடியில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. அருள்ஜோதிக்கு உடந்தையாக அவரது காதலனான நாமக்கல் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த ரகுவரன் (32) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.