
அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலில் மீண்டும் ஒரு முறை கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேசம் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நேற்று காலை 6 மணி அளவில் புறப்பட்டது. ரயில் சுமார் 90 கிமீ பயணத்திற்குப் பின் குஜ்ரா என்ற ரயில் நிலையத்தை அடைந்த போது சக்கரத்தில் கோளாறு இருந்தது தெரியவந்தது.
சக்கரங்களில் பேரிங் கோளாறு இருந்தது பணி புரியும் கேட்மேனால் கண்டுபிடிக்கப்பட்டது. அதிவேக வண்டிகளில் இந்த பேரிங் தான் பாதுகாப்பான முக்கிய பங்காற்றுகிறது. இதில் கோளாறு என்பதை கவனிக்காவிட்டால் மிக ஆபத்தான விபத்துகள் ஏற்படும் சாத்தியங்கள் உள்ளது.

ரயிலில் பயணித்த 1,068 பயணிகளும் சதாப்தி ரயிலுக்கு மாற்றப்பட்டு, இந்த வந்தே பாரத் ரயிலை டெப்போவுக்கு கொண்டு சென்று சரி செய்தனர். இந்த கோளாறுக்கான காரணம் என்ன என்பதை கண்டறிய உரிய விசாரணை நடத்தப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று நாள்களில் மூன்றாவது முறையாக வந்தே பாரத் ரயிலுக்கு சோதனை ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று எருமை மாடு மீது மோதி ரயில் விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் முகப்பு பகுதி சேதமடைந்தது.

வெள்ளிக்கிழமை வந்தே பாரத் ரயில் பசுமாடு மீது மோதி மீண்டும் ஒரு முறை விபத்துக்குள்ளானது. வந்தே பாரத் ரயிலில் அடுத்தடுத்த நாள்களில் விபத்துக்குள்ளானது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்த மூன்றாவது நாளாக கோளாறு ஏற்பட்டது. அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in