தலைநகர் டெல்லியில் கடந்த 5-ம் தேதி அசோக விஜயதசமி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக் கணக்கானோர் இந்து மதத்தில் இருந்து புத்த மதத்துக்கு மாறினர். அப்போது அவர்கள், ‘இந்து கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லை; அவர்களை வழிபட மாட்டேன்’ என்று உறுதிமொழி ஏற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம், அதுகுறித்த படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து விமர்சித்த பாஜக, ராஜேந்திர பால் கவுதமை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, “யாருடைய மத நம்பிக்கைக்கு எதிராகவும் நான் பேசவில்லை; பாஜக பொய் பிரச்சாரம் மேற்கொள்கிறது” என்று கூறினார்.