மதியம் வீடு ஜப்தி நோட்டீஸ் மாலையில் ரூ.70 லட்சம் பரிசு: மீன் வியாபாரிக்கு லாட்டரியில் அதிர்ஷ்டம்

திருவனந்தபுரம்: வீட்டை ஜப்தி செய்யப் போவதாக கூறி வங்கியின் நோட்டீஸ் கிடைத்த அடுத்த ஒரு சில மணி நேரத்திற்குள், கேரள மீன் வியாபாரிக்கு லாட்டரியில் ரூ.70 லட்சம் முதல் பரிசு கிடைத்தது. கேரள மாநிலம், கொல்லம் அருகே  உள்ள மைனாகப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பூக்குஞ்சு (40). மீன் வியாபாரியான இவர், பைக்கில் சென்று மீன் விற்கிறார். சில வருடங்களுக்கு முன், இவர் வீடு கட்டுவதற்காக வங்கியில் ரூ.9 லட்சம் கடன் வாங்கினார். ஆனால், முறையாக தவணையை கட்ட முடியவில்லை. இதனால், வட்டிக்கு மேல் வட்டியாக கடன் தொகை ரூ.12 லட்சத்தை தாண்டியது.

இதையடுத்து, நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் வங்கி அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்று ஜப்தி நோட்டீசை கொடுத்தனர். இதனால், என்ன செய்வது என தெரியாமல் பரிதவித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான், அதிர்ஷ்ட தேவதை  பூக்குஞ்சின் வீட்டுக்குள் நுழைந்தாள். இரு தினங்களுக்கு முன் மீன் வியாபாரத்திற்காக சென்றபோது ரூ.70 லட்சம் முதல் பரிசுத் தொகையான அக்க்ஷயா லாட்டரி சீட்டை பூக்குஞ்சு வாங்கினார். அந்த சீட்டுக்குத்தான் முதல் பரிசான ரூ.70 லட்சம் கிடைத்துள்ளது. ஜப்தி நோட்டீஸ் கிடைத்த நேற்று முன்தினம் மாலை 3 மணிக்குத்தான் இந்த லாட்டரியின் குலுக்கல் நடந்தது. சிறிது நேரத்திலேயே முதல் பரிசு ரூ.70 லட்சம் விழுந்தது. குடும்பத்துடன் நடுத்தெருவுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற பயத்தில் இருந்த தனக்கு, கடவுள் இந்த அதிர்ஷ்டம் கொடுத்துள்ளார் என்று பூக்குஞ்சு மகிழ்ச்சியுடன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.