தண்டவாளத்தில் தள்ளி மாணவி கொலை: அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழப்பு..!

பரங்கிமலையில், காதலனால் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.

சென்னை ஆலந்தூர் ராஜா தெரு காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் மாணிக்கம் (47). இவர், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவருடைய மகள் சத்தியப்பிரியா (20). இவர், தியாகராயநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் மதியம் பரங்கிமலை ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து மின்சார ரயில் மூலம் தியாகராயநகர் செல்வது வழக்கம்.

சத்தியப்பிரியா வசித்து வரும் குடியிருப்புக்கு எதிரே உள்ள வீட்டில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சதீஷ் (23). டிப்ளமோ படித்துள்ளார். சத்தியப்பிரியா, சதீஷ் ஆகியோரின் வீடு எதிரெதிரே என்பதாலும், இருவரும் காவலர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டுக்கும் தெரியவந்தது. இவர்களது காதலுக்கு சத்தியப்பிரியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை புரிந்துகொண்ட சத்தியப்பிரியா, சதீஷை விட்டு விலகத் தொடங்கினார். இருந்தபோதிலும் தனது காதலில் உறுதியாக இருந்த சதீஷ், சத்தியப்பிரியாவை பின்தொடர்ந்து வந்தார்.

இந்நிலையில், வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று மதியம் 1.30 மணிக்கு தனது தோழியுடன் சத்தியப்பிரியா, பரங்கிமலை ரயில் நிலையம் வந்தார். அவர் ரயிலுக்காக காந்திருந்தபோது, அங்கு சதீஷ் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது சதீஷ், சத்தியப் பிரியாவிடம் பேச முயன்றார். ஆனால், அவர் பேசுவதை தவிர்த்து வந்தார். அப்போது இருவருக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே தகராறு உச்சகட்டத்தில் இருந்தபோது, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் செல்லும் மின்சார ரயில் நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது.

சத்தியப்பிரியாவும், அவரது தோழியும் ரயிலில் ஏறிச் செல்வதற்காக தயாராக இருந்தனர். அப்போது சதீஷ், சத்தியப்பிரியாவை ஓடும் ரயில் முன்பு தள்ளினார். அப்போது ரயிலின் முன்பகுதியில் மோதிய சத்தியபிரியா தண்டவாளத்தில் விழுந்தார். இதனை சற்றும் எதிர்பாராத இன்ஜின் டிரைவர், உடனடியாக ரயிலை நிறுத்த முயன்றார். இருந்த போதிலும் ரயில் சக்கரம் சத்தியப்பிரியா மீது ஏறி இறங்கியது. ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சத்தியப்பிரியா உயிரிழந்தார்.

சத்தியப்பிரியாவை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த சதீஷ், கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர், ரயில்வே போலீசார் சத்தியப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சதீஷை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை சென்னை துரைப்பாக்கத்தில் வைத்து அவரை கைது செய்தனர். மேலும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மகள் கொலை செய்யப்பட்டதையறிந்து வேதனையடைந்த மாணவியின் தந்தை மாணிக்கத்திற்கு இன்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே, உறவினர்கள் அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டதுடன் அவரது தந்தையும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.