தொடர் மழை எதிரொலி: வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்தால் கிலோ ரூ.35லிருந்து ரூ.90ஆக அதிகரிப்பு

திண்டுக்கல் : தொடர் மழை காரணமாக திண்டுக்கல்லில் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது. திண்டுக்கல்லில் வெங்காயத்திற்கென தனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்கெட்டில் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் மட்டுமே செயல்படும். இங்கு சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சின்ன வெங்காயம் பொறுத்தவரை தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, சேலம், முசிறி போன்ற வெளியூர்களில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்காக திண்டுக்கல் மார்கெட்டிற்கு கொண்டு வருவது வழக்கம்.

அதேபோன்று, பெரிய வெங்காயம் மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். தற்போது, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை சின்ன வெங்காயத்தின் விலை அதன் தரத்தை பொறுத்து ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதன் எதிரொலியாக சின்ன வெங்காயத்தின் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், தற்பொழுது முதல் தரத்தில் உள்ள வெங்காயத்தின் விலை கிலோ ரூ.90 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர் மழை காரணமாக வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டாதால் அதன் வரத்து குறைந்துள்ளது. இதனால், வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மேலும், சில்லறை விற்பனையில் சின்ன வெங்காயம் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் பெரிய வெங்காயத்தினை வாங்குகின்றன. இதனால், கடந்த ஜனவரி முதல் தற்போது வரை ரூ.20 முதல் ரூ.30 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை தற்போது உயர்ந்துள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் வெங்காயத்தின் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.       

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.