மூன்றாவது வாரத்தில் 'பொன்னியின் செல்வன்' ரூ.500 கோடி கடக்குமா ?

தமிழ் சினிமாவில் முக்கிய சரித்திரப் படமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த படம் 'பொன்னியின் செல்வன்'. கல்வி எழுதிய நாவலை எம்ஜிஆர், கமல்ஹாசன் படமாக்க முயன்று நடத்தாமல் கைவிட்டனர். ஆனால், மணிரத்னம் அதை எடுத்து முடித்து முதல் பாகத்தையும் வெளியிட்டு நல்லதொரு வரவேற்பையும், வசூலையும் பெற்றுவிட்டார்.

இரண்டு வாரங்களில் இந்தப் படம் ரூ.400 கோடி ரூபாயை வசூலித்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. தமிழ் சினிமாவில் மிக விரைவில் ரூ.400 கோடியைக் கடந்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றது.

இன்று படம் மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்றும், நாளையும், நாளை மறுநாளும் இப்படத்திற்கான முன்பதிவுகள் சிறப்பாகவே உள்ளது. சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 60 சதவீதத்திற்கும் மேலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஐமேக்ஸ் தியேட்டர்களில் 90 சதவீதத்திற்கும் மேலான டிக்கெட்டுகள் விற்றுள்ளன.

அடுத்த வாரம் அக்டோபர் 21ம் தேதி தீபாவளியை முன்னிட்டு 'பிரின்ஸ், சர்தார்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. அதனால், அக்டோபர் 20ம் தேதி வரை 'பொன்னியின் செல்வன்' படத்திற்கான வார நாட்களின் ஓட்டம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்க வாய்ப்புள்ளது. இந்த வார இறுதி நாட்களின் வசூல், அடுத்த வார நாட்களின் வசூல் ஆகியவற்றுடன் இன்னும் ரூ.100 கோடி கூடுதலாக வசூலித்து மொத்தமாக மூன்று வாரங்களின் முடிவில் ரூ.500 கோடியை வசூலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

'பிரின்ஸ், சர்தார்' படங்கள் வந்தாலும் அடுத்த வாரத்தின் வார இறுதி விடுமுறை நாளிலும் 'பொன்னியின் செல்வன்' படத்திற்கான வரவேற்பு குறைய வாய்ப்பில்லை என்றே தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.