கள்ளக்குறிச்சி கணியமூர் மாணவி சடலத்தை பிணவறையில் இருந்த போது சட்ட விரோதமாக புகைப்படம் எடுத்து இணையதளங்களில் வெளியிட்டதாக அவரது பெரியப்பா செல்போனை சிபிசிஐடி காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அவரது சிம் கார்டு கிடைத்து இருக்கிறது. ஆனால், செல்போன் கிடைக்கவில்லை என்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளி விடுதியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். அவரது உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது பெரும் கலவரம் பள்ளியில் நடந்த நிலையில், ஸ்ரீமதியின் உடல் கேட்பாரற்று பிரேத பரிசோதனை அறையில் கிடப்பதை போல சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.

இதனை தொடர்ந்து, ஸ்ரீமதியின் தாய் செல்வியின் அக்கா கணவர் செல்வம் என்பவர்தான் இந்த புகைப்படத்தை எடுத்து இணையதளத்தில் வெளியிட்டது கண்டறியப்பட்டுள்ளது. சம்பவ தினத்தில் ஸ்ரீமதியின் உடலை பார்க்க செல்வம் சென்றுள்ளார்.
அப்போதுதான் அந்த புகைப்படத்தை அவர் எடுத்துள்ளார். புகைப்படம் எடுத்தவுடன் தனது உறவினர்கள் மற்றும் போராட்ட குழுவினருக்கு வாட்ஸ் அப்பில் அவர் அனுப்பியுள்ளது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, செல்வத்தின் செல்போனை அவர்கள் கைப்பற்றினார்.
இந்நிலையில் செல்வம் தான் பஞ்சர் ஓட்டும் கடை வைத்திருப்பதாகவும், தனது வாழ்வாதாரத்திற்கு அந்த செல்போன் எண்ணில் தான் கால் செய்வார்கள் என்றும் எனவே அதை மீட்டு தரும்படியும் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.