
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் எருமபட்டி – திப்பிலசேரி பகுதியை சேர்ந்தவர் ராஜி (35). இவர், குந்நங்குளம் பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவருடைய ஆண் நண்பர் மூலம் சாவக்காடு பகுதியைச் சார்ந்த 71 வயது முதியவர் ஒருவருடன் ராஜிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த முதியவர் 20 வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்து நல்ல வசதியுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், ராஜியும் அந்த முதியவரும் நெருங்கி பழகிய நிலையில் ஒருநாள் பியூட்டி பார்லர் அறை ஒன்றில் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது ராஜி, அந்த முதியவருக்கு தெரியாமல் தனிமையில் இருக்கும் காட்சிகளை தனது செல்போன்களில் போட்டோ எடுத்துள்ளார்.
பின்னர் இந்த புகைப்படங்களை முதியவரிடம் காண்பித்த ராஜி, இதனை உறவினர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாகவும், 50 லட்சம் ரூபாய் தந்தால் அந்த புகைப்படங்களை தந்து விடுவதாகவும் கூறியுள்ளார். இவ்வாறு அடிக்கடி போட்டோவை காட்டி மிரட்டி முதியவரிடமிருந்து ராஜி 3 லட்சம் ரூபாய் வரை பறித்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த முதியவர், நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறி குந்நங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் ராஜியை கைது செய்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த முதியவர் வசதியானவர் என்று தெரிந்து தான் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து பணம் பறிக்க முயன்றது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராஜியின் ஆண் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.