இளங்கலை முதல் முனைவர் பட்டம் வரை பல்வேறு பட்டப்படிப்புகளை வழங்கிவரும் மெட்ராஸ் பல்கலைக்கழகம் கடந்த திங்கட்கிழமை இளங்கலை படிப்பிற்கான புதியதொரு துறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பட்டத்தைப் பெரும் மாணவர்களுக்கு மெல்போர்னில் இயங்கும் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் சான்றளிதல் வழங்கப்படும். அதை பெறுவதற்கு அப்பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறுதல் அவசியம். இப்படிப்பின் முதல் நான்கு செமஸ்டர்களில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் மற்றும் நடைமுறை படிப்புகளை மாணவர்கள் படிப்பார்கள். இறுதி இரண்டு செமஸ்டர்களில் இயற்பியல், வேதியியல் அல்லது கணிதம் இப்பாடங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து படிக்க வேண்டும்.

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஸ்.கௌரி பேசுகையில் ” இந்த மூன்றாண்டுப் பட்டம் முற்றிலும் ஆராய்ச்சி சார்ந்ததாகவே இருக்கும். மாணவர்கள் தங்கள் ஆய்வு அறிக்கையின்போது ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட வேண்டும்” என்றார். பட்டப்படிப்பு மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் பிற வசதிகள் வழங்கி தரப்படும். கிண்டி வளாகத்திற்குள் நிறுவப்பட்டிருக்கும் இந்த துறைக்கான சேர்க்கை கட்டணம் ரூபாய் 49,735.
வகுப்புகள் இணைய வழியில் மெல்போர்ன் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மூலம் மேற்கொள்ளப்படும். அப்பல்கலைக்கழகம் தயாரித்த பாடத்திட்டத்தில் படிப்பதால் இப்பட்டம் உலக அளவில் அங்கீகரிக்கப்படும் எனத் தெரிகிறது. உயர்தர பல்கலைக்கழகத்தால் சான்றளிக்கப்பட இருப்பதால் மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் நேரடியாக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர இயலும்.