கேரளாவில் 2 பெண்கள் நரபலி சந்தேக வளையத்தில் நடிகர்கள்

திருவனந்தபுரம்: கேரளாவில் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வீட்டில்  சிகிச்சைக்காக வந்த மலையாள சினிமா நட்சத்திரங்களிடமும் போலீிசார் விசாரணை நடத்த உள்ளனர். கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் தர்மபுரியை சேர்ந்த பெண் உட்பட 2 பெண்கள் துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மந்திரவாதி முகமது ஷாபி, பகவல் சிங் மற்றும்  அவரது மனைவி லைலாவை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதில், விசாரணைக்கு ஷாபி சரியாக ஒத்துழைக்க மறுப்பதாக  தெரிகிறது. இதற்கிடையே, நரபலி நடந்த பகவல் சிங்கின்  வீட்டில் ஒரு மாணவியும், இளம் பெண்ணும் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களை ஒரு வாலிபர் பகவல் சிங்கின்  வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இவர்களை ஷாபி கொடூரமாக  பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.  இந்த பெண்களும் நரபலி கொடுக்கப்பட்டார்களா? என விசாரிக்கப்ட உள்ளது.

பேஸ்புக் உள்பட சமூக வலைதளங்கள் மூலமாக ஷாபி பலருக்கும் வலை விரித்துள்ளார். 6ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவரால், சமூக  வலைதளங்களை எப்படி சுலபமாக கையாள முடிகிறது என்பது போலீசுக்கு  ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அவருக்கு வேறு யாராவது  உதவியுள்ளார்களா? என்றும்  விசாரிக்கப்படுகிறது.நாட்டு  வைத்தியரான பகவல் சிங் தனது வீட்டிலும், முக்கிய நபர்களுக்கு  அவர்களின் வீடுகளுக்கு சென்றும் சிகிச்சை அளித்துள்ளார். மலையாள சினிமாவை சேர்ந்த சில நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்ளும் பகவல் சிங் வீட்டிற்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்கள் யார்? யார்? என்ற விவரங்களை போலீசார் சேகரிக்க  தொடங்கி உள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்த உள்ளனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* மகன், மகளின் ரத்த மாதிரி சேகரிப்பு
பகவல் சிங்கின் வீட்டில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட உடல் பாகங்கள் பெண்களின் உடல்கள்தான் என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்து உள்ளது. ஆனால்,  அவை நரபலி கொடுக்கப்பட்ட  பத்மா, ரோஸ்லியின் உடல்கள் தானா? என்பதை கண்டுபிடிக்க டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும். அதற்காக பத்மாவின் மகன் செல்வராஜ், ரோஸ்லியின் மகள் மஞ்சு ஆகியோரின் ரத்த  மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.

*விபசாரமும் செய்தார்
பகவல் சிங்கின் வீடு  ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ளதால், அங்கு என்ன நடந்தாலும்  வெளியே தெரியாது. இவர்  தனது வீட்டில் தான்  ஆயுர்வேத சிகிச்சையும், மசாஜும் நடத்தியுள்ளார். இங்கு வருபவர்கள்  சிகிச்சைக்காக வருவதாகவே அந்த பகுதியினர் கருதினர். ஆனால், சிகிச்சையுடன் விபசாரத்தையும் பகவல் சிங் நடத்தி வந்ததாக  விசாரணையில் தெரிந்துள்ளது. ஷாபிதான் விபசாரத்திற்காக பெண்களை அழைத்து வந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.