நீண்டகாலமாக இங்கிலாந்து ராணியாக இருந்துவந்த இரண்டாம் எலிசபெத் ராணி, காலமானதைத் தொடர்ந்து, அவருடைய மகன் இளவரசர் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராகியிருக்கிறார். ராணியின் மறைவுக்குப் பிறகு `கோஹினூர்’ வைரம் பொருந்திய கிரீடம் யாருக்குச் செல்லும் என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது
கோஹினூர் வைரம்தான் உலகின் மதிப்புமிக்க வைரமாகக் கருதப்படுகிறது. இந்த கிரீடத்தின் மையத்தில், 21 கிராம் எடைகொண்ட 105 காரட் கோஹினூர் வைரம் பொருத்தப்பட்டிருக்கிறது. கோஹினூர் வைரம் இந்தியாவுக்குச் சொந்தமானது என்றும், ஆங்கிலேயரின் படையெடுப்பின்போது இந்த வைரம் இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது எனவும் கூறப்பட்டு வருகிறது.

இதையடுத்து, உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரத்தை இந்தியாவிற்கு எப்போது கொண்டுவரப் போகிறீர்கள் என பல்வேறு நபர்களும் பிரதமர் மோடி வரை கேள்வி எழுப்பினார்கள்.
இந்தநிலையில், இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “கோஹினூர் வைரம் பற்றி இங்கிலாந்து அரசாங்கத்திடம் அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகிறோம். இங்கிலாந்தில் இருந்து கோஹினூர் வைரத்தை திரும்பக் கொண்டுவருவதற்கான வழிகளை இந்தியா தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது” என்றார்.