நத்தத்தில் பஸ்சை மறித்து போதை வாலிபர் ரகளை: சமூக வளைதளத்தில் வீடியோ வைரல்

நத்தம்: நத்தத்தில் பஸ்சை மறித்து ரகளையில் ஈடுபட்ட போதை வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் ரகளையில் ஈடுபட்ட காட்சி சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சிஎஸ்ஐ பள்ளி அருகே கருங்காலக்குடியில் இருந்து நத்தம் பஸ் ஸ்டாண்டிற்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்பகுதியில் மது போதையில் நடந்து சென்ற வாலிபர் ஒருவர், திடீரென அரசு பஸ்சை தடுத்து நிறுத்தினார். பின்னர் பஸ்சின் அடியில் அமர்ந்து ரகளையில் ஈடுபட்டார்.

அவரை பஸ்சின் அடியிலிருந்து வரும்படி டிரைவர் மற்றும் கண்டக்டர் கேட்டு கொண்டனர். ஆனால் வாலிபர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார். இதனால் நத்தம்-காரைக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து நத்தம் காவல்நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு போலீசாரின் விசாரணையில், செங்குளத்தை சேர்ந்த தேங்காய் பறிக்கும் கூலி தொழிலாளி பாண்டி பிரபு(26) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக பாண்டி பிரபு மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை அப்பகுதியை சேர்ந்த சிலர் செல்போனில் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.