ராஜிவ் கொலையாளிகள் மனு விசாரணை ஒத்திவைப்பு| Dinamalar

புதுடில்லி, முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகளான நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர், தங்களை விடுதலை செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

முன்னாள் பிரதமர் ராஜிவ், சென்னை அருகே ஸ்ரீபெரும்புதுாரில் 1991ல் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார். இதில், அவருடன் இருந்த போலீஸ் அதிகாரிகள் உட்பட 21 பேர் பலியாகினர்.

இந்தப் படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த விடுதலைப் புலிகள் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் பேரறிவாளன், நளினி, ரவிசந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, 1999ல் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின், கருணை மனு பரிசீலிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்த பேரறிவாளன் கடந்த மே மாதம் விடுதலை செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் தங்களையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக தமிழகஅரசும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.

இந்நிலையில், நளினி மற்றும் ரவிசந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் விசாரணையை 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.