பாஜகவுடன் சமரசமா?… ஸ்டாலின் அளித்த பளீச் பதில்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களின் கேள்விகளுக்கு வீடியோ வழியாக பதிலளித்துவருகிறார். இதற்கு ‘உங்களில் ஒருவன் பதில்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று அவரிடம், திமுகவின் தலைவராக இர்னடாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டது, நீட் தேர்வு விலக்கு, திராவிட மாடல் ஆட்சி, பாஜகவுடன் சமரசம் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதன் முழு விவரம் பின்வருமாறு.

கேள்வி: நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற முழக்கத்தை வைத்துள்ளீர்கள். அதனை நிறைவேற்றுவதற்கு, 2024 நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய அரசியலில் உங்கள் தலைமையிலான கழகத்தின் பங்களிப்பு என்னவாக இருக்கும்?

முதலமைச்சர் பதில்: தமிழ்நாடு, புதுவை மாநிலங்களில் நாற்பது தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்பது திமுகவின் இலக்கு. இந்தியா முழுவதும் சமூகநீதியில், கூட்டாட்சி அடிப்படையில் நம்பிக்கையான ஆட்சி அமைய வேண்டும் என்பது நமது அடுத்த இலக்கு. இதற்கான அரசியல் நடவடிக்கைகளில் தேர்தல் நேரத்தில் இறங்குவோம். 

கேள்வி: கோபாலபுரம் டூ கோட்டை, இந்த அரை நூற்றாண்டு கால பொது வாழ்க்கையை நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்..? 

முதலமைச்சர் பதில்: பொது வாழ்க்கை என்பது முள் கீரிடம் என்பதுபோல் சொல்வார்கள். என்னுடைய பொது வாழ்க்கைக்கு அங்கீகாரம் என்பது தலைவர் கலைஞர் சொன்னாரே ‘உழைப்பு, உழைப்பு, உழைப்பு’ என்பது மட்டுமே. என்னை பொறுத்தவரை அந்த உழைப்பால் மக்களுக்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்பதுதான். அதுதான் எனது பொது வாழ்க்கை. கழக பொறுப்புகள் பொறுத்தவரைக்கும் கோபாலபுரத்தில் 13 வயது இளைஞராக கோபாலபுரம் இளைஞர் திமுகவை தொடங்கினேன். 

அதன்பிறகு பல்வேறு பொறுப்புகளை கடந்து, 50 ஆண்டுகள் சுமந்து வந்ததால்தான் இன்று கழகத்தின் இரண்டாவது முறையாக தலைவராக கழக உடன்பிறப்புகளால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதேபோல், மக்கள் பணியை பொறுத்தவரைக்கும் மேயராக நான் ஆற்றிய பணிக்கு தலைநகர் சென்னையின் வளர்ச்சியே சாட்சியாக இருக்கிறது. அமைச்சராக, துணை முதலமைச்சராக என் நெஞ்சத்திற்கு நெருக்கமான திட்டங்களை பலமுறை எடுத்து கூறியுள்ளேன். 

ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம், மகளிர் சுய உதவிக்குழு போன்ற திட்டங்கள். தற்போது முதலமைச்சராக காலை உணவுத் திட்டம், மகளிருக்கான இலவச பயணத் திட்டம், நான் முதல்வன் திட்டங்கள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் திட்டங்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசப்படுவது என் காதுகளுக்கு எட்டுமே தவிர, அவற்றை என் மனதிற்கு எடுத்து செல்வதே இல்லை. என் சிந்தனை எல்லாம் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் கொண்டு வரவேண்டும். அவர்கள் முகங்களில் மகிழ்ச்சியை விதைக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு பணியாற்றுவது என் வாழ்வின் கடமையாக கருதுகிறேன். 

கேள்வி: பாஜகவுடன் திமுக சமரசத்துக்குப் போய்விட்டதாக சிலர் சொல்கிறார்களே? 

முதலமைச்சர் பதில் : இப்படி சொல்வதை பாஜகவே ஏற்றுக்கொள்ளாது.

கேள்வி:  இரண்டாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். கட்சியை வழிநடத்த புதிய திட்டம் ஏதேனும் இருக்கிறதா? 

முதலமைச்சர் பதில்: அண்ணா வழியில் அயராது உழைப்போம். கலைஞர் கருணாநிதியின் கட்டளையை கண்போல் காப்போம் என்பதை அடிப்படையிலான திராவிட மாடல்தான் எப்போதும் எனது பாதை. கொள்கையும், கோட்பாடும் எவ்வளவு முக்கியம் என்பதை கழக தொண்டர்கள், உடன்பிறப்புகள் உணரவேண்டும். 

பொதுக்குழுவில் பேசும்போதுகூட கொள்கை, நட்பையும்தான் அதிகமாக வலியுறுத்தி பேசினேன். தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் வழிகாட்டியாக திமுக இருக்க வேண்டும். இனி தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம்தான் ஆளும் என்ற நிலை ஏற்பட வேண்டும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.