அழுகிய நிலையில் காட்டு யானை சடலம்: வாளையார் அருகே கண்டுபிடிப்பு

பாலக்காடு: கேரள- தமிழக எல்லையான வாளையார் அருகே நடுப்பதி ஊர் காட்டு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானையின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் வாளையார் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ரேஞ்சர் ஆஷிக்அலி தலைமையில் வனத்துறை காவலர்கள் விரைந்து வந்து காட்டு யானையின் சடலத்தை ஆய்வு செய்தனர். அப்போது கடந்த அக். 14ம் தேதி இரவு கன்னியாகுமரி- அசாம் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி ஒரு குட்டியானை உட்பட 3 யானைகளுக்கு அடிபட்டது என ரயில்வே பைலட் தெரிவித்திருந்தார்.

இதில் 20 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை சம்பவ இடத்திலேயே இறந்தது. மற்றொரு பெண் காட்டு யானையும், குட்டி யானையும் காயமடைந்த நிலையில் காட்டுக்குள் தப்பிய வனத்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதை, தண்டவாள பராமரிப்பு பணியாளர்கள் பார்த்துள்ளனர். காயமடைந்த யானைகளை அதிகாரிகள் தேடிவந்த நிலையில், காட்டில் தேன் மற்றும் நெல்லிக்கனி சேகரிக்க சென்றவர் காட்டு அருவி மலைப்பகுதியில் இறந்து கிடந்த காட்டுயானையை பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் காட்டு யானையை வனத்துறை கால்நடை டாக்டர். ஜோயிடேவிட் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் உடற்கூறு பரிசோதனை முடித்து, வாளையார் வனத்தில் ஆழமான குழித்தோண்டி யானையின் உடலை புதைத்தனர். ரயிலில் அடிபட்ட குட்டி யானையை வனத்துறை காவலர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.