
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது. கடந்த 3-ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, 40,264 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 36,100 பேர் மட்டுமே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பித்தனர்.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22,643 பேரும், தனியார் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 13,457 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இந்த பணி நிறைவடைந்ததும் சீட் மெட்ரிக்ஸ் பணி தொடங்கும். இன ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்கள் பிரிக்கப்பட்டு தர வரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், விரைவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது.
30-ம் தேதி மாணவர்கள் சேர்கையின் முதல் சுற்று முடிவுகள் அறிவிக்கப்படும். அதில் தகுதி பெற்றவர்கள் நவம்பர் 4-ம் தேதி கல்லூரிகளில் சேர வேண்டும். மேலும், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மாணவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் நவம்பர் 15-ம் தேதி தொடங்கும்” என்று தெரிவித்தார்.