கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை – எந்தெந்த ஊர்களுக்கு?

வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்
கனமழை
கொட்டித்தீர்த்து வருகிறது. நேற்று இரவு முதலே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் அந்தியூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 17) விடுமுறை அறிவித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உன்னி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (17.10.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.