கொடைக்கானலில் சாரல் மழை: அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

கொடைக்கானல்: ‘மலைகளின் இளவரசி’ கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் ெதாடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக கொடைக்கானலில் கடும் குளிர் நிலவி வருவதுடன், அங்குள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியல் தண்ணீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி, கரடி சோலை அருவி, பாம்பார்புரம் நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி உள்ளிட்டவற்றில் தண்ணீர் ஜோராக கொட்டுகிறது.

இதற்கிடையே நேற்று காலை முதலே கொடைக்கானல் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மேகமூட்டம் அதிகமாக இருந்ததுடன் அவ்வப்போது சாரல் மழை பெய்கிறது. மேகமூட்டம் மற்றும் சாரல் மழை காரணமாக கொடைக்கானலில் நிலவும் குளிர் சற்று அதிகரித்து இருக்கிறது. இருப்பினும் கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் மழை மற்றும் கடும் குளிர் ஆகியவற்றை பொருட்படுத்தாது, ஏரி, தொப்பி தூக்கி பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாப் பகுதிகளுக்கும் சென்று இயற்கையின் அழகை ரசித்து சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.