தாராபுரத்தை அடுத்த சின்னபுத்தூர் மைனர் காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் (36). இவரின் மனைவி சந்திரகலா (30). இவர்களது மகன் வினோதர்ஷன் (8). 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சக்திவேலு தன் தோட்டத்தில் சோளம் சாகுபடி செய்துள்ளார். பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கு 12 அடி ஆழமுள்ள செயற்கை பண்ணைக் குட்டையையும் அமைத்துள்ளார்.

இந்த குட்டை எப்போதும் தண்ணீர் நிரம்பி இருக்கும். சோளப் பயிருக்குத் தண்ணீர் தேவைப்படும்போது குட்டையில் இருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் சோளத்தட்டைக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சக்திவேல், சந்திரகலா மகன் வினோதர்ஷன் ஆகியோர் தோட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளனர்.
பண்ணைக் குட்டையில் தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து குட்டையின் அருகே இருந்த மின் மோட்டாரை நிறுத்துவதற்காக சந்திரகலா மற்றும் வினோதர்ஷன் சென்றுள்ளனர்.
அப்போது வினோதர்ஷன் கால்தவறி குட்டையில் விழுந்துள்ளார். இதை பார்த்த சந்திரகலா மகனை காப்பாற்றுவதற்கான முயற்சியில் குட்டையில் குதித்தார். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் குட்டையின் கரைப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கவரை பிடித்து விடலாம் என்று நீண்ட நேரம் முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் அவர்களால் முடியாத நிலையில் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். மோட்டாரை நிறுத்துவதற்காக சென்ற மனைவியையும், மகனையும் காணவில்லையே என்று, சக்திவேல் குட்டைக்கு சென்று பார்த்தார். அப்போது தாய், மகன் இருவரும் குட்டையில் மூழ்கி கிடந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் குட்டையில் இருந்து மேலே கொண்டு வந்தனர். அப்போது சந்திரகலா இறந்துவிட்டது தெரியவந்தது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வினோதர்ஷனை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி வினோதர்ஷனும் உயிரிழந்தார்.இதுகுறித்து தாராபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.