குஜராத் காந்திநகரில் பாதுகாப்புத் துறையின் மாபெரும் கண்காட்சி இன்று தொடக்கம்!

காந்திநகர்,

இந்தியாவில் இதுவரை நடைபெறாத வகையில், பிரம்மாண்டமான முறையில் 12-வது பாதுகாப்புத்துறை கண்காட்சி குஜராத்தின் காந்திநகரில் இன்று தொடங்குகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாளை கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற உள்ள 12-வது பாதுகாப்புத்துறை கண்காட்சியின் ஒரு பகுதியாக இன்று இந்திய- ஆப்பிரிக்க பாதுகாப்பு பேச்சுவார்த்தை சந்திப்பின்போது, ஆப்பிரிக்க நாடுகளின் பாதுகாப்பு மந்திரிகளை பாதுகாப்புத் துறை மந்திரி மந்திரி ராஜ்நாத் சிங் சந்திக்க உள்ளார். ‘இந்திய-ஆப்பிரிக்கா: ராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஒருங்கிணைத்து, வலுப்படுத்துவதற்கான உத்தியைக் கையாளுதல்’ என்பது இந்தக் கூட்டத்தின் கருப்பொருளாகும்.

இந்த கண்காட்சியில் ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சித்துறை ஆகியவற்றின் நேரடி பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சிகள் மாலை நடைபெறும். பாதுகாப்பு உற்பத்தித் துறையில் இந்தியாவின் திறன்களை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக்கான கருவிகள் இடம் பெறுகின்றன.பல நிறுவனங்கள் இதில் கலந்து கொள்கின்றன.பாதுகாப்புக் கண்காட்சி-2022, இந்தியாவின் பெருமைக்கான பாதையை எதிரொலிக்கவுள்ளது. பாதுகாப்புக் கண்காட்சியை, அனைத்து தரப்பினரையும் உள்ளடங்கியதாக மாற்ற, இது நேரடியாகவும், காணொலி மூலமாகவும் நடத்தப்படுகிறது.இந்தக் கண்காட்சியில் நேரடியாக கலந்து கொள்ள முடியாத நிறுவனங்கள் காணொலி மூலம் பங்கேற்கலாம்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.