கார் கண்ணாடியில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை அகற்ற கூறிய போலீசை நடுரோட்டில் புரட்டி எடுத்த நபர்

போபால்,

மத்தியபிரதேச மாநிலத்தில் காரின் உட்புறமும் தெளிவாக தெரியும் வகையிலான ஸ்டிக்கரை மட்டுமே கண்ணாடியில் ஒட்டவேண்டும் என்று விதி உள்ளது. விதியை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலையில் வந்த ஒரு காரின் கண்ணாடி முழுவதும் தடை செய்யப்பட்ட கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

காரின் உள்ளே பயணிப்பவர்கள் யார்? என்பதே தெரியாத வகையில் மிகவும் அடர்த்தி மிகுந்த கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

இதை கண்ட அங்கு பணியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபில், காரை நிறுத்தி அதை ஓட்டிவந்த உரிமையாளரான 31 வயது நபரிடம் கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரை கிழிக்குமாறு கூறியுள்ளார்.

ஆனால், ஸ்டிக்கரை கிழிக்க மறுத்த கார் உரிமையாளர், போலீஸ் கான்ஸ்டபிலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் போலீஸ் கான்ஸ்டபிலை அந்த நபர் சரமாரியாக தாக்கினார். சாலையில் கிடந்த கல்லை கொண்டு கான்ஸ்டபில் மீது தாக்கியுள்ளார்.

பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மேலும் சில போலீசார் வருவதை பார்த்த அந்த நபர் தன் தலைமை கார் கண்ணாடியில் மோதி தானும் தாக்கப்பட்டது போன்று நடித்துள்ளார். இந்த சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கான்ஸ்டபில் மீது தாக்குதல் நடத்திய கார் உரிமையாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.