குஜராத்தில் விரைவில் பேரவை தேர்தல்: புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல்

காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று குஜராத் சென்றார். அவர் காந்தி நகரில் பாதுகாப்பு தொடர்பான கண்காட்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தீசாவில் புதிய விமான தளத்திற்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசுகையில், ‘தீசாவில் புதிய விமானப்படைத் தளம் அமைக்கப்படுவதால், இவ்விடம் நாட்டின் முக்கிய மையமாக உருவெடுக்கும்.

இந்தியாவின் பாதுகாப்பில் குஜராத் முக்கிய பங்கு வகிக்கும். தீசாவில் இருந்து 130 கி.மீ. தூரத்தில் சர்வதேச எல்லை இருப்பதால், இந்திய ராணுவ தளவாடங்கள் இப்பகுதியை பயன்படுத்த முடியும். மேற்குப் பகுதியில் இருந்து வரும் எவ்வித அச்சுறுத்தல்களையும் நம்மால் எதிர்கொள்ள முடியும். குஜராத் முதல்வராக நான் இருந்த போது, இப்பணிக்காக நிலம் ஒதுக்கப்பட்டது. அப்போதைய ஒன்றிய அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது இத்திட்டம் நிறைவேற உள்ளதால் பாதுகாப்பு வீரர்களின் கனவு நனவாகியுள்ளது’ என்றார். தொடர்ந்து நிறைவு பெற்ற வளர்ச்சி திட்டங்களை தொடங்கி  வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த  திட்டங்களின் மொத்த மதிப்பு 15 ஆயிரத்து 670 கோடி ரூபாய் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.