பொறியில் சிக்கிய ஓபிஎஸ்; தெருவுக்கு வந்த தர்மயுத்தம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைகள் அளித்தும் டிசம்பர் மாதம் 5ம் தேதி ஜெயலலிதா பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் மரணம் அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஜெயலலிதா மறைந்த மறுநாளே தமிழக முதல்வராக

பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டி, உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளியில் கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு கடந்த 2017ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் உத்தரவிட்டார்.

அதன்படி ஜெயலலிதா வழக்கு விசாரணையை நீதிபதி ஆறுமுகசாமி முடுக்கிவிட்டார். இதன் தொடர்ச்சியாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 159 பேரிடம் விசாரணை நடத்தி நீதிபதி ஆறுமுகசாமி வாக்குமூலம் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி 611 பக்க அறிக்கை தயாரித்ததோடு, சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்து வழங்கினார்.

இந்த அறிக்கை நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் சசிகலா மீது பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தம் மற்றும் அதன் பின்னணி குறித்தும் புட்டு புட்டு வைத்து ஆணைய அறிக்கை தோலுரித்துள்ளது.

அந்த அறிக்கையின் 540ம் பக்கத்தில் 46.75வது கருத்து கூறுவதாவது: ஓ.பன்னீர்செல்வம் மறைந்த முதல்வரது நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர் என்பதுடன் அவரது வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்திருந்தார்.

மறைந்த முதல்வரின் மறைவுக்கு பின்னர், சிறிதும் காலம் தாழ்த்தாமல் தமிழக முதல்வர் பதவிக்கு தன்னை பொருத்திக் கொள்ள தயார் நிலையில் இருந்து மறைந்த முதல்வரின் வாரிசாக அவர் தன்னை நிலை நிறுத்திக்கொண்டது தற்செயல் நிகழ்வல்ல/நிகழ்வாக தோன்றவில்லை.

அதிகார மையத்தின் மர்மமான சூழ்ச்சிகளால் புதிதாக கிடைத்த பதவி அவருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஏமாற்றத்தினால், கோபமடைந்த ஓ.பன்னீர்செல்வம் அரசியல் லாபத்தை அடையும் நோக்கில் 2017 பிப்ரவரியில் தர்மயுத்தம் தொடங்கினார்.

ஒரு அமைதியான பார்வையாளராக இருந்த அவர், ஆர் 2 மருத்துவமனையில் என்ன நடந்தது, மேலும் குறிப்பாக சிகிச்சை முறையில் என்ன நடந்தது? என்பதை அவர் முழுமையாக அறிந்திருந்தார். தனது பதவியை இழந்த பின்னர் அவர் தர்மயுத்தத்தை நாடி சிபிஐ விசாரணையை கோரினார்.

அந்த அறிக்கையின் 540ம் பக்கத்தில் 46.75வது கருத்து கூறுவதாவது: எனினும் விதிப்படி துணை முதல்வர் பதவிக்காக அவர் தன்னையே பொருத்திக்கொள்ள வேண்டி இருந்தது. இதுவும் வல்லவனின் தந்திரமாக இருக்கலாம்.

அவர் விரும்பிய ஒரு பகுதி மட்டுமே அவருக்கு கிடைத்திருப்பினும் மாற்றத்தின் மாறாத தன்மையாக ஒரு புதிய பரிமாணத்தில் செய்தித்தாளில் வெளியான மறைந்த முதல்வரது மறைவில் மறைந்து உள்ள மர்மம் பற்றிய பொதுமக்களின் அறிக்கைகள், வதந்திகள் மற்றும் சந்தேகங்களைக் கொண்ட செய்தி அடிப்படையிலேயே இந்த ஆணையம் அமைக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே சசிகலா உள்ளிட்ட பலரை விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தம் ( Ops Dharmayudham ) மற்றும் அதன் பின்னணி குறித்த பகீர் கிளப்பும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் தொடர்ச்சியாக தற்போது சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க, தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்புக்குழு அமைக்கப்பட உள்ள நிலையில் ஓபிஎஸ்சுக்கும் பிடி இறுகும் சூழல் ஏற்பட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் அனலை கிளப்பி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.