2000 கோடி ரூபாய் மகளிருக்கு சேமிப்பு: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தகவல்..!

அரசுப் பேருந்துகளில் 44 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளனர். இதன்மூலம், 2 ஆயிரம் கோடி அளவிலான பணம் மகளிருக்கு சேமிப்பாக மாறியுள்ளது என்று, சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில், 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர், “தமிழ்நாட்டை வளமான, வலிமையான மாநிலமாகவும், அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்ற பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. சமூக மேம்பாட்டிலும், தனி மனித வளர்ச்சியிலும் கவனம் செலுத்தும் வகையில் நாள்தோறும் பல திட்டங்களை தீட்டி வருகிறோம். அனைவரின் நலனை முன்னிறுத்தியே திட்டங்கள் தீட்டப்படுகிறது.

இதுவரை 3,337 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். அறிவிப்புகளின் நிலை கண்காணிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 78 சதவீத அறிவிப்புகள், அதாவது 2,607 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளன. மீதமுள்ள அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடவும், அரசாணை வெளியிட்டவற்றை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் தரமான கல்வியை அரசுப்பள்ளிகள் வழங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். புதிதாக சேர்ந்த மாணவர்களின் வசதிக்காக அரசுப்பள்ளிகளில் ஆயிரத்து 50 கோடி மதிப்பில் 7,200 வகுப்பறைகள் நடப்பு ஆண்டிலேயே புதிதாக கட்டப்படும். அரசுப் பள்ளிகளில் பாதுகாப்பான கற்றல் சூழல் உறுதி செய்யப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளில் பழுதடைந்த அனைத்து சாலைகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான சிறப்பு நிதியாக ரூ.2,200 கோடி வழங்கப்பட்டு 4,600 கி.மீ. நீளமுள்ள சாலைகள் நடப்பு ஆண்டிலேயே மேம்படுத்தப்படும். ரூ.7,388 கோடி மதிப்பில் 16,390 கி.மீ. நீளமுள்ள சாலைகள் படிப்படியாக மேம்படுத்தப்படும்.

1.70 கோடி பயணிகள் அரசுப் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். 44 லட்சம் பெண் பயணிகள் சராசரியாக இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். 2 ஆயிரம் கோடி அளவிலான பணம் மகளிருக்கு சேமிப்பாக மாறியுள்ளது. இதை, வருமான இழப்பாக அரசு கருதவில்லை, மகளிருக்கான வளர்ச்சியாகவே இதை பார்க்கிறோம்.

ரூ.500 கோடி மதிப்பில் 1,000 புதிய பேருந்துகள் வாங்க அரசு முடிவு எடுத்துள்ளது. நல்ல நிலையில் உள்ள 1,000 பழைய பஸ்களை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2,013 டீசல் பஸ்கள், 500 மின்சார பஸ்களை வாங்கிட நடவடிக்கை எடுத்து சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யும் அரசாக திமுக உள்ளது” எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.