ராமேஸ்வரத்தில் பலத்த மழை; ராமநாத சுவாமி கோயிலில் தேங்கிய மழைநீர்: பக்தர்கள் சிரமம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நேற்று நள்ளிரவு இடி மின்னலுடன்  பெய்த பலத்த மழையினால் சாலையில் வெள்ளம் போல் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. ராமேஸ்வரம் கோயில் சுவாமி சன்னதி பிரகாரத்தில் ஒரு அடி ஆழத்தில் மழைநீர் தேங்கியது. ராமேஸ்வரத்தில் நேற்று நள்ளிரவு துவங்கி இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையினால் சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. இதுபோல் ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதும் மழை பெய்தது. நள்ளிரவில் பெய்த மழையில் ராமேஸ்வரத்தில் 10 செ.மீ., தங்கச்சிமடத்தில் 5 செ.மீ., பாம்பனில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

நள்ளிரவில் பெய்த மழையினால் ராமநாதசுவாமி கோயில் சுவாமி சன்னதி அமைந்துள்ள முதல் பிரகாரத்தில் ஒரு அடி ஆழத்தில் மழைநீர் தேங்கியது. அதிகாலை சுவாமி தரிசனத்துக்கு கோயிலுக்கு சென்ற பக்தர்கள் தேங்கிய நீரில் கால்கள் நனைய முகம் சுழித்தபடி சென்றனர். பிரகாரத்தில் அதிகளவில் மழைநீர் தேங்கியதால் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.