இந்திய கரன்சிகளில் காந்திக்கு பதில் நேதாஜி படம் இடம் பெற வேண்டும்: இந்து மகாசபை வலியுறுத்தல்

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் அகில பாரத இந்து மகாசபையின் மாநில செயல் தலைவர் சந்திரசூர் கோஸ்வாமி பத்திரிகையாளர்கள் சந்திப்பினை நடத்தினார். இதன்பின்னர் அவர் பேசும்போது, இந்திய விடுதலை போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பங்கு எந்த வகையிலும் மகாத்மா காந்திக்கு குறைந்ததில்லை.

அதனால், இந்தியாவின் தலைசிறந்த சுதந்திர பேராட்ட வீரர் நேதாஜிக்கு கவுரவம் அளிக்கும் சிறந்த வழி, அவரது புகைப்படம் கரன்சி நோட்டுகளில் இடம்பெற செய்ய வேண்டும். காந்திஜியின் புகைப்படத்திற்கு பதிலாக நேதாஜியின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேற்கு வங்காளத்தில் பிரிவினை அரசியல் செய்வது நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளன.

அந்த அமைப்பு சார்பில், சமீபத்தில் நடந்த துர்கா பூஜையின்போது, மகாத்மா காந்தி போன்ற உருவம் கொண்ட மஹிசாசுரனின் சிலையை நிறுவியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு சில வாரங்களில் அந்த அமைப்பு இந்த புதிய கோரிக்கையை விடுத்து உள்ளது.

அடுத்த ஆண்டு மாநில பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடவும் எங்களது அமைப்பு முடிவு செய்துள்ளது என்றும் கோஸ்வாமி கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.