“மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு திட்டமிட்டு பறிக்கிறது..!'' – பாஜக-வைச் சாடும் திருமாவளவன்

இந்தித் திணிப்பு, மாநில உரிமைகள் தொடர்பாகத் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பா.ஜ.க அரசைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “1956-ம் ஆண்டு நவம்பர் திங்கள் முதலாம் நாளன்று மொழிவழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் மொழிவழி தேசிய உணர்வும் மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வும், அந்தந்த மாநிலம் சார்ந்த மக்களிடையே வளர்ந்து, அவை மென்மேலும் வலுப்பெற்று வருகின்றன. எனவே, இந்நாளை மொழிவழி தேசிய உரிமைநாளாகக் கடைபிடிப்போம். மொழிவழி அடிப்படையிலான தேசிய உணர்வுகள் மற்றும் மாநில உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள் ஒருபுறம் வலுவாக வளர்ந்து வருகிறது என்றாலும், டெல்லியில் ஒன்றிய அரசின் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் அத்தகைய மொழிவழி தேசியத்தையோ, மாநில உரிமைகளையோ ஏற்கும் முதிர்ச்சியான ஜனநாயகப் போக்குகளைக் கொண்டிருப்பதில்லை.

மோடி, அமித் ஷா

மாறாக, மொழி உணர்வுகளை நசுக்குவதிலும் மாநில உரிமைகளைப் பறிப்பதிலும் மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ செயல்படுவதைத் தொடர் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். அதன்படியே தற்போது பா.ஜ.க அரசும் மாநில உரிமைகளைப் பறிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் தமிழ்நாடும் பல்வேறு வகைகளில் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து, மொழிவழி தேசிய உரிமை நாளான நவம்பர் ஒன்றாம் நாள் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தியா ஒரு கூட்டரசு என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், அதற்கு மாறாக, மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு திட்டமிட்டே பறித்து வருகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி

குறிப்பாக, மாநிலங்களின் நிதி தற்சார்பை சீர்குலைக்கும் விதமாக ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தி மாநிலங்களுக்குக் கிடைக்கவேண்டிய நிதியையும் தானே அபகரித்துக் கொள்கிறது. ஜி.எஸ்.டி சட்டத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டிய நிதியையும் உரிய காலத்தில் அளிப்பதில்லை. இதனால், மாநில அரசுகள் தமது மக்களின் தேவைக்கேற்ற திட்டங்களை அறிவிக்க முடியவில்லை. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி என்னும் அதிகாரம் ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இப்போது அதை ஒன்றிய அரசின் பட்டியலில் இருப்பது போலக் கருதி தேசிய கல்விக் கொள்கையை பா.ஜ.க அரசு உருவாக்கியிருக்கிறது.

பள்ளிக் கல்வியிலும், உயர்கல்வியிலும் தேவையற்ற தலையீடுகளைச் செய்து தமிழ்நாட்டினுடைய கல்வி வளர்ச்சியைச் சீரழிக்க முனைகிறது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர் மூலமாக அத்துமீறுகிறது. தனது பொறுப்பின் அடிப்படையிலேயே ஆளுநர் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருப்பதை மாற்றும்வகையில், புதிதாக தமிழ்நாடு அரசு இயற்றியிருக்கும் சட்ட மசோதா உட்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் முடக்கி வைத்திருக்கிறார்.

இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும்வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் என்ற வாக்குறுதிக்கு மாறாக, இந்தியை அனைத்துத் தளங்களிலும் திணிப்பதற்கு ஒன்றிய பா.ஜ.க அரசு முயன்று வருகிறது.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம்

அண்மையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான தேசிய அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு, குடியரசுத் தலைவரிடம் அளித்திருக்கும் அறிக்கையானது இந்தி பேசாத மாநில மக்களின் மொழி உரிமைகளை முற்றாக அழிக்கும் வகையில் உள்ளது. மேலும், இந்திய நாட்டை அண்டை நாடுகளின் ஊடுருவல் மற்றும் ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாக்க வேண்டிய ஒன்றிய பா.ஜ.க அரசு, நமது நாட்டின் இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் வகையில், சீன ராணுவத்தின் அத்துமீறலை, ஆக்கிரமிப்பை வேடிக்கைப் பார்க்கிறது. தமிழ்நாட்டின் மொழி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகள் மீது அக்கறையுள்ள அனைவரும் பங்கேற்க வேண்டுமாறு அறை கூவல் விடுக்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.