கமலால் கடனாளி ஆனேனா?… முற்றுப்புள்ளி வைத்த லிங்குசாமி

கமல் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான படம் உத்தம வில்லன். படத்தின் கதை,திரைக்கதையை கமலும் கிரேஸி மோகனும் இணைந்து எழுத ரமேஷ் அரவிந்த் இயக்கினார். பெரும் எதிர்பார்ப்புடன் இந்தப் படம் வெளியானது. படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் கமலுடன் சேர்ந்து பூஜா குமார், ஊர்வசி, கே பாலச்சந்தர், நாசர், ஆண்ட்ரியா, ஜெயராம், பார்வதி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். வழக்கம் போல் கமலின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் வசூல் ரீதியாக படம் படுதோல்வியடைந்தது. இந்தப் படத்தின் தோல்வியால்தான் இயக்குனர் லிங்குசாமி பல கடன்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து கமல் ஹாசனோ, லிங்குசாமியோ இதுவரை வாய் திறக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் லிங்குசாமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் பேசுகையில், “எங்கள் நிறுவனம் இப்படி ஆனதற்கு கமல் எனும் மகா கலைஞன் மீது பழி போடாதீர்கள். அவருடன் படம் பண்ணியதே எங்களுக்கு பெரிய விஷயம். என் நிலை மாற உத்தம வில்லன் காரணம்னு நான் கூறவே மாட்டேன். அப்படி ஒரு வார்த்தை என் வாயிலிருந்து வராது. மீண்டும் ஒரு படம் பண்ணுவோம் என்று கமல் கூறியிருக்கிறார். அந்த மேஜிக் கண்டிப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனந்தம் படத்தை இயக்கியபோதே ’மதி’ என்று கமல் சாருக்காக ஒரு கதையை தயார் செய்தேன். அப்போது அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.இப்போது மீண்டும் அந்த கதையை ரீவொர்க் செய்கிறேன். கண்டிப்பாக கமல் சாருக்கு பிடிக்கும்” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.