ஆம் ஆத்மியின் குஜராத் முதல்வர் வேட்பாளராக இசுதான் காத்வி அறிவிப்பு

புதுடெல்லி: ஆம் ஆத்மியின் குஜராத் முதல்வர் வேட்பாளராக இசுதான் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்பது குறித்து அக்கட்சி கருத்து கேட்பு நடத்தியது. இதில் பகவந்த் மானுக்கே அதிக வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து, அவரே முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். தேர்தல் வெற்றியை அடுத்து அவர் முதல்வராகவும் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், அதே அணுகுமுறையை குஜராத்திலும் ஆம் ஆத்மி தொடங்கி இருக்கிறது. சூரத்தில் கடந்த அக்டோபர் 29ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மியின் குஜராத் முதல்வர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்பது குறித்து குஜராத் மக்களே தீர்மானிக்கலாம் என தெரிவித்தார். இதற்காக ஆம் ஆத்மியின் முன்னணி தலைவர்களான குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் இத்தாலியா, தேசிய பொதுச் செயலாளர் இசுதான் காத்வி, பொதுச் செயலாளர் மனோஜ் சொராதியா உள்ளிட்டோரின் பெயர்களை கட்சி பரிந்துரைத்தது. இவர்களில் யாராவது ஒருவரை தேர்வு செய்து அதனை, 6357000360 என்ற மொபைல் எண் மூலம் தொடர்பு கொண்டோ, வாட்ஸ்ஆப் மெசேஜ் மூலமோ, வாய்ஸ் மெசேஜ் மூலமோ தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. [email protected] என்ற இ-மெயில் முகவரி மூலமும் விருப்பத்தை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 3ம் தேதி மாலை 5 மணி வரை பொதுமக்கள் இவ்வாறு தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம் என கூறி இருந்த ஆம் ஆத்மி கட்சி, முடிவு நவம்பர் 4ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது.

அதன்படி, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் முடிவை அறிவித்தார். குஜராத் முதல்வர் வேட்பாளருக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் இசுதான் கத்வி 73 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக அவர் கூறினார். இதை அடுத்து , மேடையில் இருந்த இசுதான் காத்விக்கு கட்சி நிர்வாகிகள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.